Ticker

6/recent/ticker-posts

பொலிஸ் மா அதிபர் முதுகெலும்புள்ளவராக செயல்படவேண்டும் - பாராளுமன்றில் இஷாக் ரஹுமான்


பட்டப்படிப்பை பூர்த்தி செய்த போலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதாக கடந்த மைத்திரி ஆட்சியில் இருந்து கூறிவருகின்றார்கள், ஆனால் இதுவரை எதுவிதாமன பதவி உயர்வும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. ஆகவே பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் 2022.11.24 பாராளுமன்றில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், இலங்கையிலே மிகவும் பழமை வாய்ந்த திணைக்களம் தான் போலிஸ் திணைக்களம். ஆனால் ஏனைய பாதுகாப்பு படைகளுக்கு கொடுப்பது போன்று அவர்களுக்கு உணவுக்கான கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை. ஆகவே இவ்விடயம் தொடர்பிலும் பாதுகாப்பு அமைச்சு கவனத்தில் கொண்டு அவர்களுக்கான உணவுக்கான கொடுப்பனவை பெற்றுக்கொடுக்கவேண்டும்.  அதேபோல சிவில் பாதுகாப்பு படையினர் இலங்கையில் அண்ணளவாக 35,000 பேர் இருக்கின்றார்கள். அவர்கள் விவசாயம் செய்வதற்காகவும் யானை வேலி அமைப்பதற்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றர்கள். ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மிகக்குறைவாகவே காணப்படுகின்றது. அவர்களுக்கான நியாயமான  சம்பளத்தினை வழங்குவதற்கும் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை  எடுக்க வேண்டும்.

அதேபோல், கிராமங்களில் விவசாயத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் தங்களது பயிர்களை குரங்குகளிடமிருந்தும், காட்டு யானைகளிடமிருந்தும் பாதுகாத்து கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றார்கள். அகவே அவர்களது பயிர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் துப்பாக்கிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் பாதுகாப்பு அமைச்சு எடுக்க வேண்டும்.

நாட்டில் ஒருசில விஷமிகள் மீண்டும் இனவாதத்தை கொண்டுவர எத்தனிக்கின்றார்கள். பொலிஸ் மா அதிபர் அவர்களே நீங்கள் முதுகெலும்பு உள்ளவர் போன்று செய்லபடுங்கள். இனவாதத்தை தூண்டுபவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கான நடவடிக்கைகளை உடனே நடைமுறைப்படுத்துங்கள். மீண்டும் நம் நாட்டிற்குள் இனவாதம் தலை தூக்க இடமளிக்கக் கூடாது எனவும் தனது உரையில் அவர் தெரிவித்திருந்தார்.

Post a Comment

0 Comments