Ticker

6/recent/ticker-posts

தற்போதைய நீர்க்கட்டண அதிகரிப்பு தற்காலிகமானது – அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு


" தற்போதைய நீர்க்கட்டண அதிகரிப்பு தற்காலிகமானது. நிரந்தரமான விலைசூத்திரமொன்று எதிர்வரும் டிசம்பரில் அறிமுகப்படுத்தப்படும். அது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அமையும்." - என்று நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

அமைச்சில் நேற்று (17.08.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

 

" மின்சார கட்டணம் 66 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. எம்மிடம் உள்ள 324 நீர் உற்பத்தி நிலையங்களில் 2 சதவீதம்தான் சூரிய சக்தியில் (சோலார்) செயற்படுகின்றது. ஏனையவை அனைத்தும் மின்சாரத்தில் தான் இயங்குகின்றன. எனவே, மின் கட்டணம் ஒரு வீதத்தால் அதிகரித்தால்கூட நீர் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.

 

இன்று குடிநீர் பற்றி பலர் கதைத்தாலும் அதன் பின்னால் உள்ள செயற்பாட்டு பொறிமுறை பலருக்கு தெரியாது. கடந்த காலங்களில் அரசியல் ரீதியிலான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. வாக்கு வேட்டைக்காக என்னால் அவ்வாறான முடிவுகள் எடுக்க முடியாது. அவ்வாறு எடுத்தால் அது அடுத்த தலைமுறைக்கே பாதிப்பாக அமையும்.

 

நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு எமக்கு புரிகின்றது. அஸ்வெசும, சமுர்த்தி பயனாளிகளுக்கு அதிகரிப்பு கிடையாது.

 

நீருக்கான நிரந்தர விலை கட்டண சூத்திரம் டிசம்பரில் அறிமுகப்படுத்தப்படும். தற்போதைய செலவுகளைவிட, செலவுகளை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என நம்புகின்றோம். ஏனெனில் மின்சார விலையை குறைப்பது பற்றியும் ஆராயப்பட்டு வருகின்றது. 4 மாதங்களுக்கு மக்களுக்கு சுமை இல்லாத வகையில் எம்மால் தீர்மானமொன்றை வழங்க முடியும்." - என்றார்.

 

Post a Comment

0 Comments