Ticker

6/recent/ticker-posts

வியாபார நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டிருந்த பெண்களுக்கான மானிய அடிப்படையில் உதவிகள்

 


பாறுக் ஷிஹான்


கொரோனா அனர்த்தத்தில்   தமது வியாபார நடவடிக்கைகளில்  கடந்த காலங்களில் பாதிக்கப்பட்டிருந்த பெண்களுக்கான மானிய அடிப்படையில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 

பிரண்டினா(Berendina) நிறுவனத்தின் அனுசரணையில் இன்று கல்முனை தமிழ் பிரிவு  பிரதேச செயலகத்தின் 28 பயனாளிகள் மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட இரண்டு பயனாளிகளுக்கு  தலா 20 ஆயிரம் ரூபா மானிய அடிப்படையில் வழங்கி வைக்கப்பட்டது.

கல்முனை தமிழ் பிரிவு  பிரதேச செயலகத்தில்  பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜ் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கொடுப்பனவுகளை வழங்கி வைத்தார்.

இதே வேளை பிரண்டினா நிறுவனத்தின் தலைமை காரியாலயத்தில் ஏனைய பயனாளிகளுக்கு கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் பி.பிரதிலிபன் ,மாவட்ட வியாபார அபிவிருத்தி சேவைகள் ஒருங்கிணைப்பாளர் எஸ்.தினேஸ், கல்முனை கிளை முகாமையாளர் கே.கோபிகரன், வியாபார அவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஜெயரூபன் ,நீர்ப்பாசன திணைக்களத்தின் முன்னாள் பொறியியலாளர் நந்தகுமார், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குறித்த மானிய உதவித்தொகை வழங்குதலின் நோக்கம் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் தொழில் வாண்மையை ஊக்குவித்தல், தொழில் சார்ந்த அறிவுரைகளை வழங்குதல், சந்தைப்படுத்தலுக்கான வாய்ப்புகளை வழங்குதல், என்பதுடன் முடிவுப்பொருட்களை ekade.lK இணையவழியில் விற்பனை செய்வதற்கான ஆலோசனைகளை பெற்றுக்கொடுத்தல் என்பனவாகும் என பிரண்டினா நிறுவன உயர் அதிகாரி தெரிவித்தார்.

இவ்வாண்டு அக்கரைப்பற்று  பகுதியிலுள்ள திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவு , ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவு ஆகியவற்றில் 64 பேருக்கு இம்மானிய கொடுப்பனவு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments