இந்தியாவைச் சேர்ந்த மாணவி ஒருவர், உலகிலேயே மிக நீளமான கூந்தல் கொண்ட இளம் பெண்ணான சாதனை படைத்துள்ளார்.
குஜராத் மாநிலம் அஹமதாபாத் நகரைச் சேர்ந்த நிலான்ஷி பட்டேல் என்ற மாணவியே இவ்வாறு சாதனை படைத்தவராவார்.
இவரது கூந்தல் நீளம் 5 அடி 7 அங்குலங்கள் (170.5 சென்ரிமீற்றர்) ஆகும். இந்த சாதனையை கின்னஸ் சாதனை நூல் வெளியீட்டாளர்கள் அங்கீகரித்துள்ளனர்.
கடந்த 10 வருடங்களாக தனது தலைமுடியை வெட்டாமல் வளர்த்து வந்ததாக நிலான்ஷி தெரிவித்துள்ளார். இறுதியாக தனது 6 வயதில் தலைமுடியை வெட்டியுள்ள நிலான்ஷி.
நீளமானமுடியுடன் இருக்கும் கார்ட்டூன் கதாபாத்திரமான ராபுன்செல்லை எல்லோருக்குமே பிடிக்கும். இந்தியாவின் ராபுன்செல்லாக நிலான்ஷி பட்டேல் வர்ணிக்கப்படுகிறார்.
நீளமான தனது கூந்தலை வாராந்தம் ஒரு தடவை தாயாரின் உதவியோடு, சுத்தமாக அலசிப் பராமரித்து வருவதாகக் கூறுகிறார் நிலான்ஷி. தனது நீளமான கூந்தல் தனக்கு கிடைத்த அதிஷ்டம் எனக் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தான் விளையாட செல்லும்போது மற்றும் வேறு வேலைகளின் போது தனது நீளமான முடியை சடையாக பின்னல் போட்டுக் கொள்வது நிலான்ஷியின் வழக்கமாம். தலைமுடிக்கென விசேட உணவுகளோ அல்லது பழக்கவழக்கங்களோ மேற்கொள்வதில்லை என நிலான்ஷி குறிப்பிட்டுள்ளார்.
நிலான்ஷிக்கு முன்னர் அதிக நீளமான கூந்தல் கொண்ட பதின்ம வயதானவராக ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த அப்ரில் லொரன்ஸாட்டி என்பவர் விளங்கினார். அவரின் கூந்தல் 152.5 சென்ரிமீற்றர் நீளமானதாக இருந்தது.
அனைத்து பெண்களிலும் அதிக நீளமான கூந்தலைக் கொண்டவர் அமெரிக்காவின், அட்லாண்டா நகரை சேர்ந்த ஆஷா சுலு மண்டேலா என்பவராவார். தற்போது 55 வயதான அவரின் கூந்தல் 110 அடிகள் நீளமாகும்.
தொகுப்பு : எம்.எம்.இஸட். முஹம்மட்
0 Comments