Ticker

6/recent/ticker-posts

மலையகம் சம்பந்தமாக ஆணைக்குழு ஒன்று அமைக்க வேண்டும் - கணபதி கனகராஜ் தெரிவிப்பு

 


(க.கிஷாந்தன்)

" மலையக தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளும் நிறைவேற்றப்பட வேண்டும். இது விடயம் சம்பந்தமாக ஆணைக்குழுவொன்று நிறுவப்பட்டு அக்குழுவால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளின் அடிப்படையில் தீர்வு அவசியம்." - என்று இ.தொ.காவின் பிரதித் தலைவரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கணகராஜ் தெரிவித்தார்.

அட்டனில் இன்று (23.12.2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

" நுவரெலியாவுக்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தைகூட்டி முக்கிய பல விடயங்களை முன்வைத்திருந்தார். இதில் குறிப்பாக தோட்டக் கம்பனிகள் தமது கையிருப்பில் வைத்துள்ள தரிசு நிலங்கள், பயிர்செய்கைக்காக இளைஞர், யுவதிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் எனவும், கம்பனிகளுடனான குத்தகை உடன்படிக்கை இரத்து செய்யப்படும் எனவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார். இக்கூற்றை நாம் வரவேற்கின்றோம். 

அதேபோல மலையகம் சம்பந்தமாக ஆணைக்குழுவொன்றை அமைத்து, அந்த ஆணைக்குழுவால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளின் அடிப்படையில் மலையக தமிழர்களின் அரசியல்சார் பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் தேசிய நீரோட்டத்தில் எமது மக்களும் இணையக்கூடும். தமது பதவி காலம் முடிவடைவதற்குள் ஜனாதிபதி இதனை செய்ய வேண்டும். செய்வார் என நம்புகின்றோம்.

அதேவேளை,  உள்ளாட்சிசபைத் தேர்தலுக்கான பூர்வாங்க பணிகளை தேர்தல் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது. கூட்டாகவும், தனித்தும் தேர்தல்களை எதிர்கொண்ட அனுபவம் காங்கிரசுக்கு உள்ளது. எனவே, நேர காலத்துக்கு ஏற்ற வகையில் தேர்தல் சம்பந்தமாக எமது கட்சியின் தேசிய சபைக்கூடி முடிவை எடுக்கும்." - என்றார்.

Post a Comment

0 Comments