ஆர்ட்டெமிஸ் 1 என்ற திட்டத்தின் மூலம் நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் பணியில் நாசா ஈடுபட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சோதனை முயற்சியாக ஆளில்லா விண்கலம் மற்றும் ரொக்கெட்டை ஏவும் பணியில் நாசா ஈடுபட்டது. கடந்த ஆகஸ்ட் 29ஆம் திகதி ஓரியன் விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தது.
ஆனால் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவுதல் பணி நிறுத்திவைக்கப்பட்டது. ரொக்கெட்டின் 4 என்ஜின்களில் 3 ஆவது என்ஜின் செயலிழந்ததாக திட்டக்குழு தெரிவித்தது.
இதையடுத்து ஏவுதல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக நாசா அறிவித்தது.
அதன்படி நேற்று (செப்டம்பர் 3) மீண்டும் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ரொக்கெட்டை ஏவுவதற்கான 2ஆவது முயற்சியை மேற்கொள்வதாக நாசா அறிவித்தது. இலங்கை நேரப்படி இரவு 11.47 மணிக்கு நிலவுக்கு செலுத்தப்பட இருந்தது.
ஆனால் திடீரென திரவ ஹைட்ரஜன் கசிவு ஏற்பட்டது. உடனடியாக பொறியாளர்கள் கசிவு சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில், ரொக்கெட்டை ஏவும் பணிகளை மீண்டும் நிறுத்தி வைப்பதாக திட்டத்தின் இயக்குநர் சார்லி பிளாக்வெல்-தொம்சன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
0 Comments