Ticker

6/recent/ticker-posts

51 நாள் போராட்டத்தின் பின் மீளவும் ஆட்சியைப் பெற்று விளையாட்டுத்துறை அமைச்சையும் பொறுப்பேற்றுள்ளேன் - பதவியேற்பு நிகழ்வில் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ


( ஐ. ஏ. காதிர் கான் )
   51 நாள் கடும் போராட்டத்தின் பின்பு, மீண்டும் ஆட்சியைப் பெற்றுள்ள நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சையும்  பொறுப்பேற்றுள்ளேன். 

   ஊழல் மோசடிகள் அற்ற,  எந்தவிதமான  அரசியலையும் கலக்காத,  சுத்தமான துறையாக    விளையாட்டுத்துறையை புதிய உத்வேகத்துடன் முன்னெடுத்துச் செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்று, தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார். விளையாட்டுத்துறை அமைச்சில்,  தனது கடமைகளை அமைச்சர் பொறுப்பேற்றார். கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு, (21) வெள்ளிக்கிழமை நண்பகல்   இடம்பெற்றது. தனது கடமைகளைப் பொறுப்பேற்றதன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 


   அமைச்சர் அங்கு மேலும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது,
விளையாட்டில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என எதுவுமில்லை. எல்லா இனங்களுக்கும், எல்லா மதங்களுக்கும்,  கட்சி மத பேதங்களின்றி உரித்துடையதே விளையாட்டுத் துறையாகும்.  இந்த விளையாட்டுத்துறையை,  இலங்கையில் அதி சிறந்த வகையில் முன்னிலைப்படுத்துவதே எனது பிரதான இலட்சியமும் நோக்கமுமாகும். இந்த இலட்சியத்தை அடைந்துகொள்ள அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம். 

   இன்று எல்லோரும் கிரிக்கெட் விளையாட்டை மாத்திரமே ஒரு விளையாட்டாக  எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள். இது தவறு. விளையாட்டில்  இன்னும் எத்தனையோ துறைகள் இருப்பதை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். 

   விளையாட்டில் அரசியலை நுளைக்காமல் இருப்பதே எனது முதற்கட்ட நிலைப்பாடாகும். இவ்வாறான விடயங்களிலிருந்து நாம் முழுமையாக விடுபட்டிருக்க வேண்டும்.   இதுவே, எமக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் சிறந்தது.  விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதும், அதனை உச்ச நிலைக்குக் கொண்டு வருவதுமே எனது நோக்கமாகும். 

   நான் இன்று விளையாட்டுத்துறை அமைச்சைப் பொறுப்பேற்பது, மிகச்சிறந்த நடவடிக்கைத் திட்டங்களை முன்னெடுப்பதற்காகும். இதன்மூலம், எல்லோரும் நன்மை அடையவேண்டும். குறிப்பாக பாடசாலை மாணவர்களும், வலது குறைந்த படை வீரர்களும் இதனால் பெரும் நன்மை அடையவேண்டும். பாடசாலை மாணவர்கள், அவர்களின் சீருடையுடன் வருகை தரும் பட்சத்தில், அவர்களுக்கு சகல விளையாட்டுக்களையும் இலவசமாகவும், கெளரவமாகவும் பார்வையிடுவதற்கான வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்போம். 

   இன்று விளையாட்டுத்துறைக்கென ஒரு தனி அலைவரிசை இல்லாமல் உள்ளது. இவ்வாறான தனி அலைவரிசை ஒன்றை, மிக விரைவில் பெற்றுக் கொள்ளும் கடப்பாடுத் தேவையுள்ளவர்களாக நாம் இருக்கிறோம். எனவே, இது தொடர்பிலும் ஆராய்ந்து, அதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் மிக விரைவில் பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறோம். டிஜிட்டல் சம்பந்தமான துறையும், எனது அமைச்சுடன் இணைந்திருப்பதால், இதனை மேற்கொள்வதற்கு எனக்கு மிக எளிதாக முடியும். 

   இந்த ஆண்டின் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நாம், இந்த ஆண்டை விளையாட்டுத் துறையை சுத்தமாக்கும் ஆண்டாகக் கருதுவோம். அத்துடன், அடுத்த புதிய ஆண்டிலிருந்து விளையாட்டுத்துறையையும் புதிய உத்வேகத்துடன் புதிய பல அம்சங்களுடன் நடைமுறைப்படுத்துவோம். 

   கடந்துபோன 51 நாள் போராட்டத்தின் பின்பு, மீண்டும் நாம் மீட்சிபெற்று, புதிய அரசாங்கத்தை உருவாக்கியிருக்கிறோம். கடந்த நாட்களில் ஏற்பட்ட  குறைகளை நிவர்த்தி செய்து, அதனை ஒரு பாடமாகக் கற்றுக்கொண்டு, புதுப்பொழிவுடன், புதிய உற்வேகத்துடன் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக, தற்போது நாம்  பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி  வருகின்றோம். 

விளையாட்டுத்துறை சார்ந்த முன்னேற்ற செயற்பாடுகளையும், பிரகாசமானதாகமாற்றுவதற்கும்,  குறித்த இத்திட்டத்தின் கீழ் அதி சிறந்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம் என்றார்.
பிரதியமைச்சர்களான மனுஷ நாணாயக்கார, வடிவேல் சுரேஷ், ஹர்ஷன ராஜகருண மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன  உள்ளிட்ட பல பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

Post a Comment

0 Comments