Ticker

6/recent/ticker-posts

நாடாளுமன்றத்தில் 5 சதவீத பெண் பிரதிநிதித்துவம் கூட இல்லை. இந்நிலைமை மாற வேண்டும் - பாரத் அருள்சாமி தெரிவிப்பு

 


(க.கிஷாந்தன்)

 

இலங்கை சனத்தொகையில் 52 வீதமானோர் பெண்களாக இருந்தும் நாடாளுமன்றத்தில் 5 சதவீத பெண் பிரதிநிதித்துவம்கூட இல்லை. இந்நிலைமை மாற வேண்டும். பெண்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு, பெண் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சர்வதேச விவகாரங்களுக்கான பொருப்பாளரும், இ.தொ.காவின் உப தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார். 

 

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான தெளிவூட்டல் பயிற்சி பட்டறை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சர்வதேச விவகாரங்களுக்கான பொருப்பாளரும், இ.தொ.காவின் உப தலைவருமான பாரத் அருள்சாமியின் ஏற்பாட்டில் சர்வதேச பொது சேவைக்களுக்கான சம்மேளனத்தின் அனுசரனையில் கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் இன்று (31.12.2022) இடம்பெற்றது.

 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நிதி செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன், இ.தொ.காவின் பிரதி தலைவர் திருமதி. அனுஷா சிவராஜா, மஸ்கெலியா பிரதேச சபை தலைவர் திருமதி. செண்பகவள்ளி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பணிப்பாளர்கள், இளைஞர் அணி பொது செயலாளர் அர்ஜுன் ஜெயராஜ், பயிற்சி பட்டறைக்கான வளவாளர் சட்டதரணி கிருஷாந்தன், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவித்ததாவது,

 

" இன்றைய நவீன  உலகை எடுத்துக்கொண்டால் வளர்ச்சியடைந்த பல நாடுகளிலும் பெண்கள் முக்கிய பதவிகளில் இருக்கின்றனர். அவர்களுக்கு உரிய இடம் வழங்கப்படுகின்றது. எமது நாட்டில் முன்னேற்றகரமான நிலைமை இல்லை. எமது நாட்டில் இருந்துதான் உலகில் முதலாவது பெண் பிரதமர் நியமிக்கப்பட்டார். இப்படிபட்ட எமது நாட்டில் இன்று சபாநாயகர் பதவிக்குகூட பெண்ணொருவர் தெரிவுசெய்யப்படுவதில்லை என்பது வேதனைக்குரிய விடயமாகும். 

 

இந்நிலைமை மாற வேண்டும். இதற்கான முன்னுதாரணத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வழங்கியுள்ளது. கடந்த உள்ளாட்சிசபைத் தேர்தலில் நாம் பெண்களுக்கு இடம் வழங்கினோம். தவிசாளராக கூட பெண்ணொருவர் தெரிவுசெய்யப்பட்டார். மண்ணையும், பெண்ணையும் மதித்து, உரிய அங்கீகாரம் வழங்கும் கொள்கையுடனேயே காங்கிரஸ் செயற்பட்டு வருகின்றது.

 

தேர்தல்களின் போது வேட்பாளர் பட்டியலில் 25 வீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தாலும் அத்திட்டம் நடைமுறையில் இல்லை. எனவே, அது கட்டாய சட்டமாக்கப்பட வேண்டும். அப்போதுதான் பெண்களுக்கு உரிய இடம் கிடைக்கும். மாறாக மகளிர் தினத்தன்று மட்டும் மகளீரை போற்றுவதால் மாற்றம் வரப்போவதில்லை." -என்றார்.

Post a Comment

0 Comments