Ticker

6/recent/ticker-posts

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்துக்கு விரைவில் அனுமதி – சீனாவுக்கு சிறிலங்கா தெரிவிப்பு

இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரத் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படுவதற்கான சமிக்ஞை சிறிலங்கா அரசாங்கத்திடம் இருந்து கிடைத்துள்ளதாக,சீனா அரசாங்கத்தின் சிறப்புத் தூதுவராகச் சிறிலங்கா வந்த, அந்த நாட்டின்  உதவி வெளிவிவகார அமைச்சர் லியூ சென்மின் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர், பிரதமர் உள்ளிட்ட அரசின் உயர்மட்டத்தினருடன் நடத்திய பேச்சுக்களை அடுத்து, நேற்று கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தில் அவர் செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தினார்.அங்கு கருத்து வெளியிட்ட அவர்,
“சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தினேன்.
இதன் போது வரலாற்று ரீதியாக சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டது.
அதேபோன்று சீனாவின் அபிவிருத்தித் திட்டங்களை, முன்னெடுப்பது தொடர்பாகவும், கவனம் செலுத்தப்பட்டது.
சிறிலங்காவில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், இடைநிறுத்தப்பட்ட பெரும்பாலான திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை கொழும்பு துறைமுக நகரத் திட்டம் சிறிலங்காவுக்குப் பாரிய நன்மைகளை வழங்கும் திட்டமாகும். இதன் மூலம் 82,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்க முடியும்.
இந்தத் திட்டம் தாமதமடைவதால் அதில் முதலீடு செய்த நிறுவனங்கள் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளன. இது தொடர்பாக அவர்கள் எமக்கு முறைப்பாடு செய்தார்கள். இந்தவிடயம் தொடர்பாகவும் சிறிலங்கா அரச தலைவர்களுடன் பேசப்பட்டது.
இது தொடர்பிலான நிதி செலவு மீளாய்வு செய்யப்படுவதாகவும், இந்தத் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படலாம் என்ற சமிக்ஞையும் சிறிலங்கா அரச தரப்பிலிருந்து வெளிப்படுத்தப்பட்டது.
எதிர்காலத்தில் சிறிலங்காவில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது உட்பட பாரிய அபிவிருத்தித் திட்டங்களை சீனா முன்னெடுக்கவுள்ளது.
சீன சுற்றுலாப் பயணிகள் சிறிலங்கா வருவது அதிகரித்துள்ள நிலையில், இங்கு சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வதற்கும் சீன அரசு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்.
கடல்வழிப் பட்டுப்பாதை திட்டம் தொடர்பாகவும் பேச்சுகள் நடத்தப்பட்டன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சு நடத்திய போது, அவரை சீனா வருமாறு அழைப்பு விடுத்தோம். அதனை பிரதமர்ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொண்டார்.
இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு எமது பயணத்தின் மூலம் வலுப்பெற்றுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார். (புதினப்பலகை )

Post a Comment

0 Comments