Ticker

6/recent/ticker-posts

பாகிஸ்தானின் புத்தகத்திற்கு சிவசேனா எதிர்ப்பு! ஒருங்கிணைப்பாளர் மீது கருப்பு மை வீச்சு

பாகிஸ்தான் முன்னாள் அமைச்சரும், அரசியல் தலைவருமான குர்ஷி முகமது கசூரியின் புத்தகத்தை மும்பாயில் வெளியிட ஏற்பாடுகளை செய்த ஒருங்கிணைப்பாளர் சுதீந்திரா குல்கர்னியின் மீது நேற்று  கருப்பு மை வீசப்பட்டது.

சிவசேனா கட்சியினர் இந்தச் செயலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து தாக்குதலுக்குள்ளான அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுதீந்திரா குல்கர்னி செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசினார்.


அப்போது அவர் கூறும்போது, "காலை நான் என் வீட்டிலிருந்து கிளம்பும்போது சிவசேனா கட்சியைச் சேர்ந்த சிலர் சுற்றிவளைத்தனர். என்னை தேச துரோகி என்று அழைத்து அவதூறு பேசினர். பின்னர் கருப்பு மையை என் மீது ஊற்றி என்னைப் பற்றி மிகவும் தரக்குறைவாக பேசினர்" என்றார்.

அவர் மேலும் கூறும்போது, "இந்தியா - பாகிஸ்தான் உறவை மேம்படுத்தவே இந்தப் புத்தக வெளியீட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சிவசேனாவின் அச்சுறுத்தலுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம். அவர்களால் நாட்டுக்கு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தித் தரவில்லை.
எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. எங்களுக்கும் தேசபக்தி இருக்கிறது. அதற்காக இந்தியா - பாகிஸ்தான் மக்கள் ஒருவொருக்கொருவர் சந்திக்ககூடாது என்பதில்லை" என கூறினார்.

இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த குல்கர்னி, மை பூச்சு கோலத்துடன் வந்திருந்தார்.
அவர் கூறும்போது, "மும்பை வோர்லியில் திட்டமிட்டபடி இன்று மாலை 5.30 மணிக்கு புத்தக வெளியீட்டு விழா நடைபெறும். உத்தவ் தாக்கரேவை சந்தித்து நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளேன்.
போலீஸ் தரப்பில் முழு பாதுகாப்பு அளிப்பதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. மாலை நிகழ்ச்சியில் எழுத்தாளர் குர்சி முகமது கசூரி கலந்து கொள்கிறார்" என்றார்.

பாஜக மூத்த தலைவர்கள் அடல் பிஹாரி வாஜ்பாய், எல்.கே.அத்வானி ஆகியோருக்கு மேடைப்பேச்சு எழுத்தாளராக குல்கர்னி பணியாற்றியிருக்கிறார். தற்போது அவர், அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் அமைப்பினை நடத்தி வருகிறார்.

சிவசேனா கட்சியினர் கடும் எதிர்ப்பு காரணமாக மும்பையில் நடைபெறவிருந்த பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. "குலாம் அலியின் நிகழ்ச்சியை உடனடியாக ரத்து செய்க. ஏனெனில் அவர் நம் நாட்டின் மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். எக்காரணமும் இல்லாமல் நம் படை வீரர்கள் தங்கள் இன்னுயிரை இழக்கின்றனர். எனவே, இந்திய குடிமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்த நிகழ்ச்சியை ரத்து செய்யுங்கள்" என சிவசேனா அச்சுறுத்தியிருந்தது. இதன் காரணமாக அந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. தற்போது மீண்டும் பாகிஸ்தான் தலைவர் ஒருவரது புத்தக வெளியீட்டு விழாவுக்கு சிவசேனா எதிர்த்துள்ளது.

Post a Comment

0 Comments