பாடசாலையில் கொடுக்கப்பட்ட வீட்டுப்பாடங்களை செய்யாத காரணத்திற்காக தனது மகனுக்கு தீ மூட்டிய தந்தை ஒருவரை பாகிஸ்தான் பொலிஸாா் கைது செய்துள்ளனா்.
கராச்சியில், ரைஸ் அம்ரோஹ்வி கொலனியில் வசிக்கும் நசீர் என்பவா் தனது 12 வயது மகன் ஷஹீர் என்ற சிறுவன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் கடந்த செப்டம்பா் 14ஆம் திகதி நடந்துள்ளது. பாகிஸ்தானின் டோன் இணையதளம் இந்த செய்தியை நேற்று (21) வெளியிட்டுள்ளது.
கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான சிறுவன், முதலில் அருகிலுள்ள சிந்து அரச மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து கராச்சி டாக்டர் ரூத் பிஃபாவ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும். பின்னர் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் கொடுத்த புகாரின் பேரில் தந்தையை கைது செய்த பொலிஸாா் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
முதற்கட்ட விசாரணையின் போது, சந்தேக நபரான தந்தை விசாரணை அதிகாரிகளிடம் தனது மகனைக் கொல்லும் நோக்கத்தை இதனை செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
பாடசாலையில் கொடுக்கப்பட்ட வீட்டுப்பாடத்தை செய்யாததால் பயமுறுத்துவதற்காக மண்ணெண்ணெய்யை அவர் மீது தெளித்ததாக கூறிய தந்தை. சிறுவனை பயமுறுத்துவதற்காக தீக்குச்சியைக் கொளுத்தியதாகவும், அந்தவேளை சிறுவனின் உடல் தீப்பிடித்து எரிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
0 Comments