Ticker

6/recent/ticker-posts

இனமுரண்பாடுகளைத் தோற்றுவித்து வன்முறையைத் தூண்டும் சதித் திட்டங்களுக்கு இடமில்லை: ரணில் விக்ரமசிங்க

இனங்களுக்கு இடையே முரண்பாடுகளைத் தோற்றுவித்து வன்முறைகளைத் துண்டும் சதித் திட்டங்கள் சில தரப்புக்களினால் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும், அதனை நல்லாட்சி அரசாங்கம் அனுமதிக்காது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  

30 வருட கொடூர யுத்தத்திற்குப் பின்னர் இனங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள ஒற்றுமை மற்றும் சமாதானத்தை சீர்குலைக்க இடமளிக்க முடியாது. இனங்களுக்கிடையிலான சமாதானத்தை குழப்ப முற்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  அவர் குறிப்பிட்டுள்ளார்
பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வரவு- செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே  பிரதமர் ரணில் விக்ரமசிங்க  மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாட்டில் மீண்டும் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவித்து, இன வன்முறைகளை தூண்டும் சதித் திட்டங்கள் இடம்பெற்றுவருவதாக சந்தேகம்  எழுந்துள்ளது.
குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த சில நாட்களாக மிகவும் மோசமான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி வன்முறைகளை தூண்டிய “சிங்கள மக்களின் பாதுகாவலன்“ என தன்னை அழை த்துக்கொண்ட டான் பிரயசாத் என்ற நபரை, கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் சிலரே தூண்டி விட்டதாக குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன.
இவ்வாறான நடவடிக்கைகளுக்கு இனியும் நாட்டில் இடமளிக்க முடியாது. நாட்டில் தற்போது நிலவும் சுதந்திரத்தை பயன்படுத்தி இவ்வாறான செயல்களில் ஈடுபட அனுமதிக்க முடியாது. 
அதேவேளை, சில ஊடகங்களும் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டு வருகின்றன. மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைவதற்காக சில ஊடகங்கள் இவ்வாறு நடந்துகொள்கின்றன. இதனால் ஊடகங்களின் செயற்பாடுகள் தொடர்பில் மறுபரீலினை செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது.” என்றுள்ளார்.

Post a Comment

0 Comments