Ticker

6/recent/ticker-posts

மக்களுக்கான குடிநீர் திட்டம் ஆரம்பம்

 


மாத்தளை மாநகரசபைக்குட்பட்ட களுதாவளை 2ஆம் வட்டாரம், சிந்தாகட்டி குமர பெருமாள் கோவிலை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான வேலைத்திட்டம் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


மக்களின் சார்பில், மாத்தளை மாநகரசபை முதல்வர் சந்தனம் பிரகாஷால், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமையவே இதற்கான வேலைத்திட்டம் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை, களுதாவலை 2ஆம் வட்டாரம், சிந்தாகட்டி குமர பெருமாள் கோவிலை சூழவுள்ள பகுதிகளில் சுமார் 80 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன. குடிநீர் வசதி இன்மையால் அப்பகுதி மக்கள் சொல்லொணாத் துயரங்களை சந்திக்க நேரிட்டது.

  
மாத்தளை மாநகர முதல்வரின் அழைப்பின்பேரில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அண்மையில் மாத்தளைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

 

அமைச்சருடன், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரன், உப தலைவரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சிவஞானம் என பலரும் சென்றிருந்தனர்.


இதன்போது களுதாவளை பகுதி மக்களையும் நேரில் சந்தித்து கலந்துரையாடினார். மாநகர முதல்வர் ஊடாக மக்கள் முன்வைத்த குடிநீர் வேலைத்திட்டம் நிச்சயம் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.


இதற்கமைய விரைந்து செயற்பட்ட அமைச்சர், உடனடியாக குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இதன்படி குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கான ஆரம்பக்கட்ட வேலைத்திட்டம் தற்போது ஆரம்பமாகி, பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


தமது கோரிக்கையை ஏற்று, உறுதி மொழியை நிறைவேற்றிய அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு பிரதேச மக்களும், மாநகர முதல்வர் சந்தனம் பிரகாசும் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments