சவூதி அரேபியாவின் தென்மேற்கு பகுதியான 'ஆசிர் மாகாணத்தில் உள்ள அனாதை இல்லத்தில் காவல்துறையினர் இளம் பெண்களைக் கொடூரமாக தாக்குவதைக் காட்டும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருகின்றன.
இந்தத் தாக்குதலைப் படம்பிடித்த ஒரு பெண் கடந்த செவ்வாயன்று ட்விட்டரில் முதன்முதலில் இந்த வீடியோவை வெளியிட்டிருந்தாா்.
பாதுகாப்புச் சீருடையில் இருந்த அதிகாாிகளும், மற்றும் சவுதி தேசிய உடையில் இருந்த நபா்களும் பெண்கள் பலரை துரத்திச் சென்று தாக்குவதையும், தடிகளால் அடிப்பதையும், தோல் பட்டிகளால் தாக்குவதையும் இந்த வீடியோ காட்டுகிறது.
தலைநகர் ரியாத்தில் இருந்து தென்மேற்கே சுமார் 884 கிலோமீட்டர் (550 மைல்) தொலைவில் அமைந்துள்ள காமிஸ் முஷெய்த் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. எனினும், இந்த சம்பவம் எப்போது நடந்தது என்பது உடனடியாகத் தெரியவில்லை.
மேலும் இந்த வீடியோ, அனாதை இல்லத்தின் வழியாக பெண்களை அதிகாரிகள் துரத்துவதையும் கொடூரமாக தரையில் தள்ளுவதையும் காட்டுகிறது.
அனாதை இல்லத்தில் போராட்டம் நடாத்திய இளம் பெண்களே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
சவூதி அரேபியாவில் உள்ள அனாதை இல்லங்கள் அந்நாட்டு மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தால் கண்காணிக்கப்படுகின்றன.
சம்பவம் குறித்த கூடுதல் தகவலுக்கான கோரிக்கைக்கு சவுதி அதிகாரிகள் உடனடியாக பதிலளிக்கவில்லை என்று பிாித்தானியாவின் மெயில் ஒன் லைன் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோக்கள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்ததாக அரப் நிவ்ஸ் இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
சவூதி அரேபிய மனித உரிமைகள் ஆணையம், சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாகவும், அதற்காக ஒரு குழுவை அரசாங்கம் நியமித்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து சவூதி அரேபிய மனித உரிமைகள் ஆணையம் செயல்பட்டு வருவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments