Ticker

6/recent/ticker-posts

வறிய மாணவர்களின் கல்விக்கு உதவும் பெரோஸா முஸம்மிலின் பணி பாராட்டத்தக்கது - அமைச்சர் தலதா அத்துகோரள

( ஐ. ஏ. காதிர் கான் )

   அரசாங்கம் மாணவர்களின் கல்வித்தேவைகளை இலவசமாக நிவர்த்தி செய்து வருவதுபோல், ஏ.ஜே.எம். முஸம்மில் மன்றத்தின் மகளிர் பிரிவினரும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை சாதி சமய வேறுபாடுகளின்றி வழங்கி வருகின்றமை பாராட்டத்தக்கது. இப்பணிகளுக்காக அயராது முன்னின்று பாடுபட்டுவரும் மகளிர் அணிப்பிரிவின் தலைவி ஹாஜியானி பேரோஸா முஸம்மிலையும்  இத்தருணத்தில் பெருமையுடன் பாராட்டுகின்றேன் என, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் நீதி அமைச்சர் தலதா அத்துகோரள புகழாரம் சூட்டினார்.

   கொழும்பு மாவட்ட வறிய பாடசாலை  மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, (28) வெள்ளிக்கிழமை மாலை, கொழும்பு - பொது நூலகக் கேட்போர் கூடத்தில், ஏ.ஜே.எம். முஸம்மில் மன்றத்தின் மகளிர் பிரிவுத் தலைவி பெரோஸா முஸம்மில் ஏற்பாட்டில், 18 ஆவது வருடமாக இடம்பெற்றது.  இச்சிறப்பு நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே, அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

   பெரோஸா முஸம்மிலின் பிறந்த தினமான டிசம்பர் மாதம் 28 ஆம் திகதியன்று, வருடந்தோறும் இடம்பெற்று வரும் இச்சிறப்பு  நிகழ்வில், அமைச்சர் தலதா அத்துகோரள மேலும் பேசும்போது கூறியதாவது,  
   வறிய மாணவர்களின் கல்விக்கு உதவுவது, வசதி உள்ளவர்களின் கடமை என நான் கருதுகின்றேன். அந்த வகையில், தனது பிறந்த தினத்தில் வீண் விரயங்களைச் செய்யாமல், இவ்வாறான நன்மையான கைங்கரியங்களில் ஒவ்வொரு வருடமும் பெரோஸா முஸம்மில் தன்னை அர்ப்பணித்து வருவது, பாராட்டத்தக்கதும் மகிழ்ச்சிக்குறியதுமாகும். 

   பெரோஸா முஸம்மிலுடன் மிக நீண்டநாள் தொட்டு நான் பழகி வருகின்றேன். அவர் எந்தவித இன, மத, மொழி வேறுபாடுகளின்றி இவ்வாறான கல்விப் பணிகளை முன்னெடுத்து வருகின்றார். அவர், எவருக்கும் இல்லை என்று ஒருபோதும் சொல்லுவதில்லை. தாராள மனங்கொண்டு உதவுபவர். மிகச்சிறந்த சமூக சேவையாளர். எதனையும் அர்ப்பணிப்புடனும், தூர நோக்குச் சிந்தனையுடனும், மிகவும் சிந்தித்து நிதானமாக மேற்கொள்பவர்.  இவரது இக்கல்விப்பணி, தொடர்ந்தும் ஒவ்வொரு வருடமும் இதேபோன்று மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்காக எனது நல்லாசிகளையும், இவருக்கு சமர்ப்பிக்கின்றேன். 

   இன்று அரசாங்கத்தை பலபேர் ஏதாவது  ஒன்றைக் கூறி, குறை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம்  கல்விக்காக பல இலவசத் திட்டங்களை அறிமுகப்படுதியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன இலவசப் பாடப்புத்தகங்களையும், பிரேமதாச இலவச சீருடைத்துணிகளையும், தற்போதைய கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இலவச காப்புறுதித் திட்டத்தையும் அறிமுகப்படுத்தி வைத்துள்ளனர். அத்துடன், அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலைத் திட்டத்தையும் முன்னெடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளனர். 

   எமது அரசாங்கம், அதிகாரங்களுக்குத் துணை போகும் அரசாங்கமல்ல. அரசாங்கம் என்ற வகையில், நடந்தேறும் ஆட்சிக் காலத்துக்குள், நாம் மக்களின வாழ்வாதார மற்றும் அபி்விருத்தித் திட்டப் பணிகளுக்கும்,   அதேபோல் மாணவர்களின் கல்வி வளர்ச்சிப் பணிகளுக்கும் உந்து சக்தியாகவும் உறுதுணையாகவும் இருப்போம் என்பதனை, இத்தகு சிறப்பான சந்தர்ப்பத்தில் நம்பிக்கையோடு தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார். 

Post a Comment

0 Comments