கொழும்பில் ரோஹின்ய முஸ்லிம்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் நேற்று -01- சிலர் கல்கிசை நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். இதன்போது மதுஷான் செனவிரத்ன பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் ஏனைய அனைவரும் எதிர்வரும் அக்டோபர் மாதம் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந் நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் அனைவரும் 9 ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளனர். இதனைவிட அடையாளம் காணப்பட்ட மேலும் இரு சந்தேக நபர்களை தேடும் பணிகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
சந்தேக நபர்கள் மன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது பாதிக்கப்பட்ட ரோஹிங்யா அகதிகள் சார்பில் ஆர்.ஆர்.டி. அமைப்பின் சார்பில் சட்டத்தரணி சிந்தக ரன்கொத்கே மன்றில் ஆஜரானார். அவர் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவதற்கு கடும் ஆட்சேபனை வெளியிட்டார். அத்துடன் சந்தேக நபர்களுக்கு எதிராக பொலிஸார் தண்டனை சட்டக் கோவையின் அத்தியாயங்களை மட்டும் உள்ளடக்கி குற்றச்சாட்டினை முன்வைத்திருந்த நிலையில், ஐ.சி.சி.பி.ஆர். எனப்படும் சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டுச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்கள் ஏன் முன்வைக்கப்படவில்லை என சட்டத்தரணி சிந்தக ரன்கொத்கே கேள்வி எழுப்பினார். சந்தேக நபர்களுக்கு எதிராக சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டுச் சட்டத்தின் 3(4) ஆம் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என இதன்போது சட்டத்தரணி சிந்தக சுட்டிக்காட்டினார்.
இதனை அடுத்து மன்றில் ஆஜரான சட்டத்தரணி அது தொடர்பில் சட்ட மா அதிபருடன் கலந்துரையாடி மன்றுக்கு அறிவிப்பதாக தெரிவித்தார்.
குறிப்பாக ரோஹிங்ய முஸ்லிம் அகதிகளுக்கு எதிராக திடீரென முன்னெடுக்கப்பட்ட இந்த அத்துமீறல்களின் பின்னணி தொடர்பில் விசாரணையாளர்கள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதன்போது பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அகதிகள் மிரிகான தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த போது, சுகயீனமுற்று களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அகதி இளம் பெண் ஒருவர், பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டார். கங்கொடவில நீதிவான் நீதிமன்றில் இது தொடர்பிலான வழக்கு பீ/ 2030 /17 எனும் இலக்கத்தின் கீழ் நடைபெற்று வருகின்றது.
இதில் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தரான டி.பி.ஜி. குணவர்தன வாசை பாதிக்கப்பட்ட யுவதி அடையாளமும் கண்டிருந்தார். இந் நிலையில், அது தொடர்பில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டிருந்தார். இந்த பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கையைக் கருத்தில் கொண்டே மிரிகானைக்கு வெளியே ரோஹிங்ய அகதிகளை தங்கவைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
இந் நிலையில், இந்த பாலியல் துஷ்பிரயோக சம்பவத்தின் பிரதான சாட்சியாளர்களாக பாதிக்கப்பட்ட யுவதியும் அவரது மைத்துனரான மொஹம்மட் அமீன் என்பவருமே உள்ளனர். இந்நிலையில் ரோஹிங்ய முஸ்லிம் அகதிகளை முடியுமான வரை அவசரமாக நாடு கடத்துவதன் ஊடாக இந்த வழக்கில் இருந்து தப்பிக் கொள்ளலாம் எனும் எண்ணத்தில் அகதிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டமும் அத்து மீறலும் நடாத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அத்துமீறல்களின் போது, துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகத்தரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டமை ஊடாக இந்த தகவல்கள் மற்றும் சந்தேகம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
கல்கிசையில் ரோஹிங்ய முஸ்லிம் அகதிகள் மீதான அத்துமீறல்கள் சிலரால் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதில் கலந்துகொண்ட ஏனையோர் உண்மை நோக்கத்தை அறியாது சட்டவிரோத கும்பலின் உறுப்பினர்களாக செயற்பட்டிருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளனர். எனினும் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் உறுதி செய்துகொள்ள கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
MFM.Fazeer (Jaffna Muslim )
0 Comments