Ticker

6/recent/ticker-posts

உல்லாசப் பயணத்துறையின் வேகமான வளர்ச்சி வேகத்திற்கேற்ப கைத்தறி, நெசவுத் தொழிலையும் வளர்த்தெடுக்கும் வேலைத்திட்டத்தை மேற்கொண்டுள்ளோம். கைத்தறி, நெசவுப் பொருட்கள் கண்காட்சியில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

இலங்கையில் உல்லாசப்பயணத்துறையின் வேகமான வளர்ச்சிக்கேற்ப பாரம்பரிய புடவை மற்றும் கைத்தறி நெசவுத் துறையையும் விருத்தி செய்ய வேண்டிய தேவைப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அடுத்த மூன்றாண்டுகளில் இத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் தொகையை 50000 ஆக அதிகரிப்பதற்கு கைத்தொழில் வர்த்தக அமைச்சு வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

புடவைத் தொழில் மற்றும் கைத்தறி நெசவுத் தொழில் தொடர்பான கண்காட்சியொன்று பண்டாரநாயக்கா சர்வதேச மண்டபத்தில் நடைபெற்ற போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது,

நமது நாட்டில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் பாரம்பரிய கைத்தொழில் துறையில் சுமார் 2 இலட்சத்திற்கு மேற்பட்டோர் ஈடுபாடு காட்டினர். காலப்போக்கில் இந்தத் துறையில் ஆர்வம் குன்றியதனால் இந்தத் தொழிலில் ஈடுபடுவோரின் தொகை 10000 ஆக குறைந்துள்ளது. தொழிலாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சி நமது நாட்டின் உள்ளூர் வருவயை மிகவும் பாதித்துள்ளது. அது மட்டுமன்றி அண்மைக்காலமாக சுற்றுலாத்துறையின் வளர்ச்சி வேகம் அதிகரித்து வருவதனால் கைத்தறித் துறையை மேம்படுத்துவதன் மூலம் அண்ணியச்செலாவணியை பெருக்கிக் கொள்ள முடியும்.

இலங்கையின் சுற்றுலாத்துறை அடுத்த 3 வருடங்களில் 2020 ஆம் ஆண்டளவில் 30,00000 ஆக அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது இருக்கும் தொகையை விட மும்மடங்கு அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை ஈடுகொடுக்கக் கூடிய வகையில் கைத்தறித் துறையையும் மேம்படுத்த வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம். இந்தத் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் நூலினை அரசும் தனியார் துறையினரும் இணைந்து இறக்குமதி செய்து நியாயமான விலைக்கு உற்பத்தியாளர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம். அதே போன்று நாட்டிலுள்ள அத்தனை வடிவமைப்பு நிலையங்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து உச்ச பயனை அனுபவிக்கும் வகையில் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.


யுத்தத்தின் காரணமாக வடக்குக் கிழக்கில் அழிந்து போயுள்ள கைத்தறி நெசவுத் துறையை எங்கள் அமைச்சும் மாகாண அமைச்சுக்களும் இணைந்து விருத்தி செய்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை இதன் மூலம் மேம்படுத்த முடியுமென தாம் நம்புவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

-      அமைச்சின் ஊடகப்பிரிவு

Post a Comment

0 Comments